You are currently browsing the category archive for the 'பயணம்' category.

குடும்பத்தோட ஊர் சுத்தி பாக்க போனா இந்த மாதிரி படமெடுக்ரதுக்குள்ள ஒரு வழி பண்ணிருவாய்ங்க. “இப்ப இந்த மட்டைய எதுக்காக படமெடுத்திட்டுருக்க, நேரமாகுது இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள அடுத்தயும் பாத்துட்டு கிளம்பணும்”.. அநேககமாய் எல்லா குடும்ப சுற்று-உலாவில் இது நடக்கும். வந்த __ நாள்ல எவ்வளவு பாக்க முடியிமோ அம்புட்டையும் பாத்துட்டு கிளம்பிரனும். என்ன பார்த்தோம், என்ன அடைந்தோம்? இவிங்கள வெச்சுக்கிட்டு படமெடுக்ரதுக்குள்ள யப்பா சாமி..

காற்றும் கடல் நீரும், அலையும் இணைந்து உருவாக்கிய யானை…

முல்லையின் மன்னவனை நினைத்து நெய்தல் வடித்த சிலை…

இந்த மாதிரி என் வீட்டில் விரிக்க ஆசை…

பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே – நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ
பொன்வடிவம் கொள்ளாத போது

(திருவருட்பா மூன்றாம்; திருமுறை: வள்ளலார் ராமலிங்க அடிகளார்)

சமீபத்தில் பாரீஸ் சென்று வந்தேன். (இந்த இடத்தில அனுப்பி வைத்த நிறுவனத்தை நினைவு கூறாவிட்டால நன்றி மறந்தவனாவேன்). நான் சென்ற போது பனிக்காலம் உச்சத்தில். கையில் உரை மாட்டியும் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு குளிர். சரியான வரைபடமிருந்தால் நம்ம முனுசாமி கூட சுற்றிவிட்டு வந்து விடலாம். அந்த அளவுக்கு பேருந்து, ரயில் வசதி உள்ளது. ஒரே கஷ்டம் “ஃபான்ஜொ, “‘மெர்சி” என்று இரண்டே வார்த்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. பிரஞ்சுகாரர்கள் அந்த அளவுக்கு தங்களின் மொழியை நேசிப்பதிலிருந்து, நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ” இவன் ஏன் பிரஞ்சு கத்துக்காம வந்து என் பிரானன வாங்குறான்னு” ஒரு லுக்கு விட்டுக்கிட்டேதான் பதில் சொல்றாங்க.

சரி இப்ப விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி தவிர்க்கவே முடியாத ஒன்று:


ஈஃபிள் கோபுரம அந்தி நேரத்தில

உலகத்துலயே அதிகமாக புகைப்படம் மெடுக்கப்படும் ஒரே இடமாயிற்றே, அதனால நானும் புடிச்சுக்கிட்டு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது, ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. மேலேயிருந்து பார்க்கும்போது ஏதோ கடந்து வந்த சரித்திரத்தயே பார்ப்பது போல் தோன்றியது. நான் மேலேயிருந்து கீழே இறங்குவதற்குள் மாலை நேரமாகிவிட்டது. மிக அழகாக கோபுரத்தை ஒளியூட்டும் மின் – விளக்குகள் பொருத்தி, அதற்கு நடுவே அயிரக்கணக்கில் பளிச்சிரும் விளக்குகள் மிக ரம்மியமான காட்சி. ஒரு முறையேனும் வாழ்கையில் சென்று பார்த்தே ஆகவேண்டும்.

இத்தோட நிறுத்திக்கிறேன். இது ஏதோ பாரீஸ் பயண கட்டுரை அல்ல. அதுதான் நிறைய பேர் எழுதியிருக்காங்களே. நா என்னத்த புதுசா எழுதறது. இது நான் அங்கு சந்த்தித்த ஒரு தமிழ் நண்பரை பற்றி. நாக்கு செத்துப்போய் நான் இந்திய ரெஸ்டாரன்ட்டை தேடிச் சென்ற போது நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே ஒன்று இந்தது.
வட இந்திய உணவு வகைதான். ஆனால் நடத்துவது ஒரு இலங்கை தமிழர். உணவு தயாரிப்பது பஞ்சாபி, மற்றும் உபிகாரர்கள். பரிமாறுவது இலங்கை தமிழர் என்ற ஒரு கூட்டனி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நான் சொல்ல வந்தது இந்த சர்வரை பற்றி. நான் தமிழன் என்று கூறியதும், உள்ளே சென்று அந்த வார விகடன், துக்ளக், குமுதம், எடுத்து வந்து காத்திருக்கும் நேரத்தில் படிக்குமாரு குடுத்ததிலிருந்த அந்த அந்யோன்யம் நான் பாரீசில்தான் இருக்கிறேனா என்று சந்தேகம் வந்துவிட்டது. கூட்டம் குறைந்த பின் பேசிக்கொண்டிருந்தோம். படிப்பை பாதியில் விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று வேலைக்கான விசாவுடன் வந்து, நான்கு பேருடன் ஒரு ரூமில் தங்கி, இந்த நாட்டில் வாழ்வதற்காக, நேரம் கிடைக்கும் போது பிரெஞ்சு மொழி பயில்வதை பற்றி சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல ஏறக்குறைய அனேகம் பேர் இப்படித்தான் இடம்பெயர்ந்துள்ளனர். பேச்சு அங்கே இன்னும் நிகழும் கொடுமைகளை சுற்றி வந்தது. பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த தன்னுடை நண்பன் சமீபத்தில், பத்திரிக்கை அலுவலகத்திலேயே ஆசிரியர் மற்றும் இன்னும் நான்கு பேரோடு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை பற்றி கூறினார். மிருகங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு மனிதருக்கில்லை என்பதை கூறும் போது மிகவும் கலங்கிப் போனார். சிறு வயதில் தான் வளர்ந்த கிராமத்தில் ‘கிட்னா’ என்ற நாய் குட்டியை அங்குள்ள எல்லோருமே வளர்த்ததையும், இன்று அது வளர்ந்து பெரிதாகி குட்டி போட்டு உயிருடன் இருப்பதாகவும், ஆனால் உடன் வளர்ந்த தன் நண்பர்கள் எட்டு பேரில் தான் மட்டுமே உயிருடன் இருப்பதாக சொன்னபோதுதான் அதன் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. அவருடைய பேராசிரியர் கூறுவாராம் , இன்றய காலகட்டத்தில் இந்த உலகத்தையே எண்ணி 80-100 முதலாளிகள் (capitalist) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எப்போது இவர்கள் அழிகிறார்களோ அப்போதுதான் சாதாரன மனிதனுக்கு உண்மையான் சுதந்திரம் என்றால் என்னவென்று புரியும்.

உண்மைதானோ? ஈழத்து மக்களுக்கு தீர்வு கானல் நீரோ?

பிகு: இந்த பதிவு பாரீஸ் நண்பருக்காக.