You are currently browsing the monthly archive for மே 2006.

சமீபத்தில் பாரீஸ் சென்று வந்தேன். (இந்த இடத்தில அனுப்பி வைத்த நிறுவனத்தை நினைவு கூறாவிட்டால நன்றி மறந்தவனாவேன்). நான் சென்ற போது பனிக்காலம் உச்சத்தில். கையில் உரை மாட்டியும் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு குளிர். சரியான வரைபடமிருந்தால் நம்ம முனுசாமி கூட சுற்றிவிட்டு வந்து விடலாம். அந்த அளவுக்கு பேருந்து, ரயில் வசதி உள்ளது. ஒரே கஷ்டம் “ஃபான்ஜொ, “‘மெர்சி” என்று இரண்டே வார்த்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. பிரஞ்சுகாரர்கள் அந்த அளவுக்கு தங்களின் மொழியை நேசிப்பதிலிருந்து, நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ” இவன் ஏன் பிரஞ்சு கத்துக்காம வந்து என் பிரானன வாங்குறான்னு” ஒரு லுக்கு விட்டுக்கிட்டேதான் பதில் சொல்றாங்க.

சரி இப்ப விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி தவிர்க்கவே முடியாத ஒன்று:


ஈஃபிள் கோபுரம அந்தி நேரத்தில

உலகத்துலயே அதிகமாக புகைப்படம் மெடுக்கப்படும் ஒரே இடமாயிற்றே, அதனால நானும் புடிச்சுக்கிட்டு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது, ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. மேலேயிருந்து பார்க்கும்போது ஏதோ கடந்து வந்த சரித்திரத்தயே பார்ப்பது போல் தோன்றியது. நான் மேலேயிருந்து கீழே இறங்குவதற்குள் மாலை நேரமாகிவிட்டது. மிக அழகாக கோபுரத்தை ஒளியூட்டும் மின் – விளக்குகள் பொருத்தி, அதற்கு நடுவே அயிரக்கணக்கில் பளிச்சிரும் விளக்குகள் மிக ரம்மியமான காட்சி. ஒரு முறையேனும் வாழ்கையில் சென்று பார்த்தே ஆகவேண்டும்.

இத்தோட நிறுத்திக்கிறேன். இது ஏதோ பாரீஸ் பயண கட்டுரை அல்ல. அதுதான் நிறைய பேர் எழுதியிருக்காங்களே. நா என்னத்த புதுசா எழுதறது. இது நான் அங்கு சந்த்தித்த ஒரு தமிழ் நண்பரை பற்றி. நாக்கு செத்துப்போய் நான் இந்திய ரெஸ்டாரன்ட்டை தேடிச் சென்ற போது நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே ஒன்று இந்தது.
வட இந்திய உணவு வகைதான். ஆனால் நடத்துவது ஒரு இலங்கை தமிழர். உணவு தயாரிப்பது பஞ்சாபி, மற்றும் உபிகாரர்கள். பரிமாறுவது இலங்கை தமிழர் என்ற ஒரு கூட்டனி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நான் சொல்ல வந்தது இந்த சர்வரை பற்றி. நான் தமிழன் என்று கூறியதும், உள்ளே சென்று அந்த வார விகடன், துக்ளக், குமுதம், எடுத்து வந்து காத்திருக்கும் நேரத்தில் படிக்குமாரு குடுத்ததிலிருந்த அந்த அந்யோன்யம் நான் பாரீசில்தான் இருக்கிறேனா என்று சந்தேகம் வந்துவிட்டது. கூட்டம் குறைந்த பின் பேசிக்கொண்டிருந்தோம். படிப்பை பாதியில் விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று வேலைக்கான விசாவுடன் வந்து, நான்கு பேருடன் ஒரு ரூமில் தங்கி, இந்த நாட்டில் வாழ்வதற்காக, நேரம் கிடைக்கும் போது பிரெஞ்சு மொழி பயில்வதை பற்றி சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல ஏறக்குறைய அனேகம் பேர் இப்படித்தான் இடம்பெயர்ந்துள்ளனர். பேச்சு அங்கே இன்னும் நிகழும் கொடுமைகளை சுற்றி வந்தது. பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த தன்னுடை நண்பன் சமீபத்தில், பத்திரிக்கை அலுவலகத்திலேயே ஆசிரியர் மற்றும் இன்னும் நான்கு பேரோடு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை பற்றி கூறினார். மிருகங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு மனிதருக்கில்லை என்பதை கூறும் போது மிகவும் கலங்கிப் போனார். சிறு வயதில் தான் வளர்ந்த கிராமத்தில் ‘கிட்னா’ என்ற நாய் குட்டியை அங்குள்ள எல்லோருமே வளர்த்ததையும், இன்று அது வளர்ந்து பெரிதாகி குட்டி போட்டு உயிருடன் இருப்பதாகவும், ஆனால் உடன் வளர்ந்த தன் நண்பர்கள் எட்டு பேரில் தான் மட்டுமே உயிருடன் இருப்பதாக சொன்னபோதுதான் அதன் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. அவருடைய பேராசிரியர் கூறுவாராம் , இன்றய காலகட்டத்தில் இந்த உலகத்தையே எண்ணி 80-100 முதலாளிகள் (capitalist) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எப்போது இவர்கள் அழிகிறார்களோ அப்போதுதான் சாதாரன மனிதனுக்கு உண்மையான் சுதந்திரம் என்றால் என்னவென்று புரியும்.

உண்மைதானோ? ஈழத்து மக்களுக்கு தீர்வு கானல் நீரோ?

பிகு: இந்த பதிவு பாரீஸ் நண்பருக்காக.

இரண்டு நிகழ்வுகள்:

முதல் காட்சி: இடம் மதுரை பழங்காநத்தம், வருடம் 1982.

தங்கம் தியேட்டரில் எதோ ஒரு சினிமா (என்ன படம் என்று ஞாபகமில்லை) பார்த்துவிட்டு வழக்கம் போல லைட் எரியாத சைக்கிளில் பின்னால் நண்பனுடன, அதாவது டபுள்ஸ், தெனாவெட்டாக வந்து கொண்டிருந்தேன். மதுரை கல்லூரி பாலம் தாண்டியாகிவிட்டது. அப்பாடா தப்பிச்சுட்டோம்னு, அடுத்து மீனாட்சி மில் பாலமும் தாண்டி வசந்தநகர் பக்கம் வந்து பைபாஸ் ரோடுக்கு போகும் ஒரு சிரு குறுக்கு ரோடில் பின்னால் அமர்ந்து வந்த நண்பனை இரக்கிவிடலாம் என்று நிறுத்தியபோது எங்கிருந்துதான் வந்தார் என்று தெரியவில்லை. ஒரு ஏட்டு கப்புன்னு புடிச்சிட்டாரு. “ஏன்டா லைட் இல்லாம டபுள்ஸ் வேரயா”ன்னு. நாங்கள் நின்ற இடத்திலிருந்து B8 காவல் நிலையம் நூறடி கூட இருக்காது. “எவ்வளவு தைரியமிருந்தா போலீஸ் ஸ்டேஷன் கிட்டயே நிறுத்துவ?” என்று சைக்கிளை தள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு நடக்கச் சொன்னார். நங்களும் கையில் மிச்சமிருந்த எட்டு ரூபாய் எழுவத்தஞ்சு பைசாவை அன்பாக கொடுத்து விட்டுரங்க சார்ன்னு ரொம்ப மரியாதையாக கேட்டோம். லஞ்சம் வேரயா கொடுக்றீங்க, ஏன்டா படிக்ர பசங்களாடா நீங்க, எங்கடா படிக்றீங்க, இதான் சொல்லிக் குடுக்றாங்களா? என்று ஏகமாய் ரெளசு பண்ண ஆரம்பித்து, நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஸ்டேஷனுக்கு தள்ளிக்கொண்டு போய்விட்டார். எங்க பரம்பரையில யாருக்குமே இப்டி ஒரு நிலம வரல. எங்க வீட்டுல தெரிஞ்சா எங்கம்மா உயிரையே விட்ருவாங்கனெல்லாம் சொல்லிப்பாக்கலாமன்னு லேசா ஒரு எண்ணம். ம்ஹும் அந்த ஏட்டு மசியர ஆளா தெரியல. சைக்கிளை, அங்கே அருங்காட்சியகாத்திலிருந்த ஒரு குமியலோடு சேர்த்து செயின் போட்டு பூட்டிவிட்டார். பின்பு உள்ளே சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று ஏதோ வீட்டை உடைத்து திருடிக்கொண்டு போக இருந்த போது கையும்களவுமாக பிடித்தது போல ஒரு பில்ட்-அப்புடன் விவரித்தார். நான் வெளியே நின்றிருந்தேன். சட்டென்று “ஏ மொட்டை (அப்போது நான் திருப்பதி சென்று முடி இரக்கியிருந்தேன்) இங்க வாடா” என்று அன்புடன் சப்-இன்ஸ்பெக்டர் அழைத்தார். என்க்கா ஒரே ஆச்சர்யம், எப்டிடா ஆள பாக்காமயே கரெக்டா “மொட்டன்னு” கூப்டுராருன்னு. உள்ள போன பின்னாடிதான் தெரிஞ்சுது ஒரு ரியர் வியு மிரர் வெச்சுருந்ததை. எங்கடா உன் வீடு, யாருடா உங்கப்பா என்று விலாவாரியா விசாரித்து ரைட்டர் எழுத்திக்கொள்ள (வாய்க்கு வந்த தெருவையும் வீட்டு நம்பரையும் கொடுத்தாலும் அப்பா பேரை சரியாக சொன்னேன், என்னதான் இருந்தாலும் அப்பா பேர மாத்த முடியாத ஒரு சென்டிமென்ட்) , நாளைக்கு சென்ட்ரல் பஸ்டாண்ட் (அப்ப அதான் பேரு இப்ப ரொம்ப மாறி போச்சாமே? நான் மதுரைக்கு கடைசியாக சென்றது 1995ல்). எதுத்தாப்புல மொபைல் கோர்ட் வரும் பத்து மணிக்கு வந்து ஃபைன் கட்டுன்னுட்டாரு. வேர வழியில்லாம சோகமாக வீட்டுக்கு போய், சைக்கிள் எங்கடான்னு எங்கம்மா கேக்க, வழில பஞ்சர் அதனால செல்வம் சைக்கிள் ஸ்டாண்டில்(பைப்பாஸ் பாலம் தொடங்கும் இடத்தில் தியேட்டருக்கு எதிரில் டீக்கடைக்கு அருகிலிருந்த நம்ம ஆஸ்த்தான ஜாயின்ட்) விட்டு வந்திருக்கேன், ராத்திரி லேட்டாயிருச்சு, காலேல வான்னு சொன்னான என்றேன். பின்பு டயர் பர்ஸ்ட், டியுபும் மாத்தனும் அப்டி இப்டின்னு கெஞ்சி அம்மாவிடம் இருந்து அறுபது ரூபாய் வாங்க்கிக்கொண்டு கிளம்பினேன். வழியில் செல்வம் கடைக்குச்சென்று, ஏட்டிடம் சொல்லி வாங்கித்தர முடியுமா என்று கேட்டேன். ஆனால் மாசத்துக்கு கொஞ்ச்ம கேஸ் காட்ட வேண்டுமாமே (ஊர்ல எல்லா பயலுகளும் திருந்தீட்டாய்ங்கன்னா இவிங்க கேஸ் வேணும்னு எதாவது பண்ணச் சொல்லுவாய்ங்களோ???) அதனால ரொம்ப கஸ்டம, பேசாம மொபைல்ல போயி ஃபைன் கட்டீருன்னுட்டாரு. சரின்னு சென்ட்ரல் வந்து மொபைல் கோர்ட்டுக்கு வந்தேன். அங்கே, பழ வண்டியை ரோட்டின் ஓரமாக நிறுத்தியது, பஸ்ஸில் பிளேடு போட்டது, மாட்டுத்தொழுவத்தின் வழியாக உள்ளே சென்று குடத்தை திருடினது, தியேட்டரில் ப்ளாக்கில் டிக்கெட் விற்றது, இது போக ஒரு பத்து சைக்கிள் லைட் இல்லாத கேஸ் என்று நம் சக “குற்றம் சாட்டப்பற்றவர்கள்” வரிசையாக ஒரு லைனில் நிறுத்தப்பட்டனர். ஒரு ஸ்டாண்டர்டு வேனை கோர்ட்டாக்கியிருந்தார்கள். இரு புறமும் கதவுகள் வைத்து ஒரு பக்கம் ஏறி ஒவ்வொருவராக உள்ளே ஜட்ஜு (அட நம்ம சப்-மாஜிஸ்ட்ரேட்டுங்க) முன்னால நிக்கனும். அப்ப பக்கத்துல இருக்ற கோர்ட் க்ளார்க் கேஸ் என்னான்னு படிப்பார். உடனே ஜட்ஜூ “குடத்த திருடினியா” அப்டீன்னு கேப்பாரு.

கேசு, “வந்துங்கன்னு …” இழுப்பாரு,

ஜட்ஜு: ” டே திருடினியா இல்லயா, இருவது ரூவா கட்டு இல்லேன்ன மூனு நாள் உள்ள இரு”,

கேசு: ” இல்லீங்க வந்து …”

ஜட்ஜு: “திருடிப்புட்டு பேசிக்கிட்டே போறியே? அம்பது ரூவா கட்டு. போ”.

கேசு:”…………..”

டாவாலி: போ வெளியே. ம்ம் அடுத்து யாரு உள்ள வா.

லைன்ல் நிக்கிரப்போ ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு சொல்லிச்சு, இங்க பாரு உள்ள போயி “லைட் இல்லாம போனியா”ன்னு கேட்டா உடனே” ஆமா சார், தெரியாம பண்ணீட்டேன்னு” சொன்னேன்னா இருவது ரூவாயோட போகும்னாரு. என் முறை வந்தது. சுரேசாடா, உள்ள வா என்று அன்போடு அழைத்தார்கள்.

“லைட் இல்லாம போனியா”

ஏதோ எவரஸ்ட் ஏறும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாம போனியான்னு கேட்ட மாதிரி, “ஆமா சார்ன்னு” சொன்னேன்.

” இருபது ரூபா கட்டு”

கட்டிவிட்டு வந்ததும், ஏட்டு அந்த ரசீதை வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் சாவியை கொடுத்து ஸ்டேஷனுக்கு போயி சைக்கிளை எடுத்துக் கொள்ளுமாரு சொன்னார்.

It is kike a breeze என்று சொல்வார்களே, அதுமாதிரி விசாரிப்பதும், தீர்ப்பு கொடுப்பதும் மின்னல் வேகத்தில் நடந்தது கண்டு புளங்காகிதமடைந்தேன்.

————————
காட்சி இரண்டு: வெலிங்டன், வருடம் 2006.

சனிக்கிழமை இரவு ஒன்பது மணி இருக்கும். பையனை இரக்கிவிட்டு, ஏதோ ஒரு அவசரத்தில், தெனாவெட்டாக காரை ரிவர்ஸ் எடுத்த போது, இரு புறமும் பார்க் செய்திருந்த கார்களில் வலது புறமுள்ள ஒரு காரின் மீது மிக சிறு உரசல் கேட்டு, அந்த அதிர்ச்சியில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்த கார் இன்னும் வேகமெடுத்து ஒரு யு-டர்ன் அடித்து, இடது புறமிருந்த காரின் மீது ஏறி நின்று விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு காரிலிருந்து இரங்கி வந்து பார்தால் என்க்கே ஆச்சர்யமாக இருந்தது. டபுள் பார்க்கிங் என்று சொல்வார்களே அதை வேற மாதிரி செய்திருந்தேன். ஒரு பளபளக்கும் கருப்பு டொயோட்டா கொரொல்லா கூரையின் மீது என்னுடைய கார் நின்று கொண்டிருந்தது. அப்போதுதுதான் எனக்கு ரிவர்ஸ் கியர் எத்தனை பவர்ஃபுல் என்று தெரிந்தது. கார் ஒட்ட கற்றுக்கொள்ளும் போது என்னுடைய இன்ஸ்ட்ரக்டர் சொல்லுவார். ஏதாவது மலை பிரதேசத்தில் மிகவும் சரிவான ரோட்டில் கார் ஏற திணறினால், ட்ராஃபிக்கை பார்த்துக்கொண்டு, காரை ரிவர்ச்ஸில் ஓட்ட முடியுமானால் மிக சுலபமாக ஏற முடியுமென்று.

என்னடா செய்வதென்று இருந்த போது, அந்த இடத்தில் அப்போதிருந்த சில பெண்களில் ஒருவர் போலிசை கூப்பிட. சிகப்பு, நீல லைட் எரிய ஒரு பைக்கில் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் வந்து சேர்ந்தார். வந்தவுடன் உனக்கு ஒன்னும் அடி கிடி படவில்லையே? வேரு யாருக்கும் அடி பட வில்லையே? என்று விசாரித்தார்.
என்ன நடந்தது என்று கேட்டர்ர். விவரித்தேன். குடிக்கும் பழக்கமுண்டா என கேட்டார். அப்படியெதுவுமில்லை என்றேன். அங்கு வந்து சேர்ந்த மற்றொரு கான்ஸ்டபிள் அங்கிருந்த அந்த பெண்களிடம் எப்படி நடந்தது என நேரில் கண்ட சாட்சிகள் குறிபெடுத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட காரின் ஓனரை (பாவம் சிவனே என்று திரந்த வெளி அரங்கில் ஜான் ட்ரவோல்டா ஒலிவியா நியுடன் ஜான் நடித்த க்ரீஸ் என்ற கலக்கல் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார்). அழைத்து வந்தனர். அவரிடமும் குறிபெடுத்துக்கொண்டனர். பின்பு டோவிங்சர்வீஸ் வந்து இரண்டு காரையும் எடுத்துக்கொண்டு போனார்கள். எல்லாம் முடிய சரியாக 22 நிமிடங்களே ஆனது. பின்பு ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் கொண்டுவிடவா யாரவது உதவிக்கு இருக்கிறார்களா என விச்சாரித்தார். நண்பர்கள் வந்து சேர்ந்ததால, நன்றி கூறினேன். டேக் கேர் என்று கிளம்பி சென்றனர். அப்படி ஒரு ஆக்ஸிடண்ட் நடந்த இடம் மாதிரி எந்த சுவடுமில்லை.

பின்பு இரண்டு வாரங்களுக்குப் பின் வீடு தேடி வந்து காரை கவனமில்லாது கையாளுதல் பிரிவின் கீழ் குற்றம் சுமத்த பட்டு பின்பொரு நாள் கோர்டில் விச்சாரிப்போம், ஆனால் அதற்கு முன்பாக ஏதேனும் தெரிவிக்க வேண்டுமானால் கடிதம் மூலம் தெரிவிக்கவும் என்று சார்ஜ் ஷீட் கொடுத்து சென்றார் ஒரு கான்ஸ்டபிள். என்னத்த சொல்ல என்று நண்பர்கள், சிடிசன் அடிவைஸ் என்று விசாரித்தேன். ஒண்ணுமில்ல மிஞ்சிப்போனா ஒரு இரநூறு டாலர் ஃபைன, முப்பது டீ மெட்ரிட் பாயின்ட் போட்டு விட்டுருவாங்கன்னு சொன்னாங்க. சரி ஆனது ஆகட்டும்னு காரை சரி செஞ்சு எல்லாம் சகஜமாயிட்டுது. அப்புறம் இன்ன தேதி உன்னோட கேஸ் விசாரனைக்கு கோர்ட்டுக்கு வான்னு லெட்டர் வந்தது. வக்கீல் வேணுமா வேண்டாமா என விசாரித்து, பின்பு வேண்டாம் நானே சென்று வாதாடுவது என்று முடிவாயிற்று (அதான் ஏற்கனவே கோர்ட்டெல்லாம் ஏறி அனுபவமெல்லாம் இருக்கே). வெப-சைட் மற்றும் பிற வக்கீல் அட்வைஸ் படி படு ஷோக்காக ட்ரெஸ் செய்துகொண்டு போனேன். போன பின்னாடிதான் தெரிஞ்சுது நாம சொஞ்சம் ஓவர்ன்னு. அவனவன் வெள்ளயடிக்ரத பாதில விட்டுட்டு வந்த மாதிரில்லாம் ட்ரெஸ் பண்ணீட்டு வந்து இருந்தாங்க. அங்க இருந்த ட்யூட்டி சொலிசிட்டர்ட்ட எனக்கு இந்த ஊர் கோர்ட் புதுசு என்ன் எப்டி கேப்பாங்கன்னு கேட்டேன். அவரு ரொம்ப ஃபீலிங் ஆகி, கவல படாதே டென்ஷ்ன் ஆகாதே, ஒண்ணுமில்லே, ஏன் நடந்தது, எப்டி நடந்தது, எனக்கு என்னோட லைசென்ஸ் இல்லாட்டி செத்துபூடுவேன், யுவர் வொர்ஷிப்புன்னு (800 வருஷத்துக்கு முந்தின பழக்கமாம் ஜட்ஜ இப்டி மரியாதையா அழைக்கனுமாம்) சொல்லு கம்மியா போட்டு விட்ருவாங்கன்னாரு. சரின்னு “யுவர் வொர்ஷிப்’ யுவர் வொர்ஷிப்” ன்னு ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருந்தேன்.
கஷ்டப்பட்டு நம்ம பேர மைக்ல கூப்டாங்க. உள்ள போனேன். மிக நேர்த்தியாக அழகாக அமைந்த இருக்கைகள், மேடை, மைக் என்று அழகாக இருந்தது கோர்ட் ரூம். மேடையில் இரண்டு ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ்கள் (JP) அமர்ந்திருந்தனர். இந்த மாதிரி தம்மாதூண்டு கேஸ்க்கெல்லாம் JPதானாம். இது தவிர ஒரு க்ளார்க் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி. மிக அமைதியாக இருந்தது கோர்ட் ரூம். யெஸ் மிஸ்டர் சுரேஷ், டேக் யுவர் சீட் என்று மிக மரியாதையாக சொன்னார்கள். ஏதோ வேலைக்கான இன்டர்வியு மாதிரி. சார்ஜ் ஷீட் படித்த பின் would you like to plead guilty or not guilty என்று கேட்டார்கள். அய்யா தப்புதேன் என்றவுடன், ஒரு JP புன்முறுவல் பூத்து, மொதோ வாட்டின்றதால உனக்கு diversion வழங்குகிறோம். அது என்னன்னா, ஃபைனே போடாம இருக்க முடியாது ஏன்னா எங்களோட நேரம் இந்த கோர்ட் ரூம் செலவுமாவது நீ குடுக்கனும். அது கூட கோர்ட்டுக்கு குடுக்க வேண்டாம். ஏதாவது சமூக நல தொண்டு புரியும் ட்ரஸ்ட்க்கு டொனேஷனா குடு போதும்னாரு. உன் பேர்ல இருக்ர சார்ஜ்ஜ வாபஸ் வாங்கிடுவோம், உன் போரே ரிகார்டுல வராது அப்டீன்னாரு. ஆகா இதுவல்லவா தீர்ப்பு என்று அப்படியே செய்கிறேன் என்று கூறி வந்து விட்டேன்.
————————

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இரண்டும் வேறு வேறு நாட்டில் நடந்திருந்தாலும் தப்பு செய்ததை ஒத்துக்கொள்ளும் மன்ப்பான்மையில் வேறுபாடு உள்ளது. அங்கே இளவயதில் சைக்கிளில் லைட் இல்லாமல் போவது தப்பு என்று தெரிந்தாலும் அது ஒரு ஹீரோயிசம் போலிருந்தது. இங்கே குற்றத்தை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்ளும் மனதிருந்தது. ஒரு மனிதனை அவன் குற்றம் சாட்டப்பட்டவனாக இருப்பினும் அவனை நடந்த்தும் முறையில் வேறுபாடு உள்ளது. தனிமனிதனிடம் சட்டத்தை மதிக்கும் போக்கில் வேறுபாடுள்ளது. சட்டத்தை பாதுகாப்போரிடம் வேறுபாடுள்ளது. ஆனால் சட்டம் மட்டும் இரண்டு நாட்டிலும் ஒன்றாகவே தெரிகிரது. அங்கே சட்டம் இருந்தும் அதை மதிக்காத ஒரு மன்ப்பான்மை. குற்றம் புரிந்த பின் அதிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் உத்திகள் இவையெல்லாம் எப்படி ஒருவருக்கு செய்யத்தோன்றுகிரது? எங்கிருந்து கற்றோம் இதனை? இப்போது அங்கே இருந்தால் சைக்கிளில் நிச்சயம் லைட் இல்லாமல் என்னால் போக முடியாது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை விவரிப்பது கடினம். “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ….” என்பது வேத வாக்கு. அதை அடைவதற்கு நெடுங்காலமாகும்.